கொளுத்தும் வெயிலில் வியர்வை கசகசப்போடு தொடங்கிய நாள் திடிரென மோடம் போட ஆரம்பித்தது. சூரியனார் அரை நாள் விடுமுறை எடுத்து கொண்டு அவசர அவசரமாக அவர் வீடு நோக்கி சென்று விட்டார் என்று எண்ணிக் கொண்டேன்.
மண் வாசனை
எந்த கண்ணாடி பாட்டிலிலும் அடைக்க முடியாத வாசனை திரவியம், எந்த கடையிலும் விற்பனையாகாத சரக்கு. விண்துளிகள் மண்ணைத்துளைக்க, மண் துளைகளின் வழியே, வெளியேறும் வேதிப்பொருட்கள் வான் நீர் கண்ட ஆனந்தத்தில் திளைத்து தன்னையே மோகத்தில் பலி கொடுப்பது போல், மேகநீரில் கரைந்து போகும் போது மணத்தை பரப்பி விடுகிறது.

மழைக்காலம் என்றாலே பிறக்கும் குதூகலம் எல்லோருக்கும், எல்லா வேளைகளிலும் தோன்றுவதில்லை. ஒழுகாத கூரையும், மழையில் முடங்காத தொழிலும் பெற்ற வர்களுக்கு தான் மழை வரம், மற்றவர்களுக்கு சாபமே தான்.

முதன்முதலாக மழையை எப்போது வேடிக்கை பார்த்தேன்? முதன்முதலாக மழையில் எப்போது நனைந்தேன்? எவ்வளவு முயன்றும் திரும்ப பெறவியலாத நினைவாகி விட்டது.

புதையல்
வீட்டின் அருகில் ஓங்கி உயர்ந்த மாமரத்தில் இருந்து பொத்தென்று விழுந்த புதையல்….. ஆம்! “ஆம்” தான்! ஒரு கொத்து மாங்கனிகள்! ஓடிப்போய் மடியில் கட்டிக் கொண்டு வீட்டை அடைந்தேன். ஊசியாய் பொழிந்த மழையை விட இந்த மாங்கனி மழை முப்பது வருடங்களுக்கு பிறகும் மறக்க வில்லை.
அந்த மாமரத்து வீடை பேருந்தில் கடக்கும் போது, கூட்டாஞ்சோறு, மண்வீசி புழுதியில் புரண்டு விளையாடியது. ரத்தம் தோய்ந்த சிராய்ப்பு, அழுகையை தராத விழுப்புண்கள், லீவு விட்டா போதும் வானரங்கள் தொல்லை தாங்காது என்ற புனைபெயரில் சுற்றி வந்த மழலை பட்டாளங்கள் நாங்கள். ஒரு வாடகை வீடு தந்த நினைவுகளை இன்று வரை சேமிக்கிறேன்.
நகரின் மையப்பகுதி என்றாலும் இன்று வரை என் மாமரம் வெட்டப்பட வில்லை. வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு வீடு, வெவ்வேறு நண்பர்கள், அதே மழை ஆனால் மழை தந்த நினைவுகள் தனி. இதம் தரும் நினைவுகளுக்காவது இன்றைக்கு எப்படியாவது மழையை சேமித்து வைக்க வேண்டும்.
Rain water is a natural and precious water resource that can be stored for long time to use for any purpose and it gives a pleasant smell when it reaches earth. Playing in rainfall is a bliss. Through Rain Water harvesting method, rainfall is collected from various surfaces and platforms and stored for later use. Farmers obtain most of the water for their crops from rain. Rain water that is not absorbed by the soil and plant roots runs into streams and rivers.
