உங்களிடம் தொடர்ந்து கணவர் பொய் பேசினால் அவர் மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய தவறாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம் விட்டுப் பேசுங்கள். சுஜாதாவுக்கு கல்யாணமாகி அவளும் அவள் கணவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். தினமும் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசி கூட பல வாரங்கள் ஆகிவிட்டன.
அவர் என்னை எப்படி திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். அப்போதாவது நாங்கள் இருவரும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா. எதை வேண்டுமானாலும் ஒரு பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் கணவர் தன்னிடம் பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ள இயலாது என்று கண்ணீர் விடுகிறார், அவர்.
இந்த மாறி ஒரு சில சுஜாதாக்கள் மட்டும்மல்ல பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். கணவரால் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவர் இருந்தும் வாழ்க்கை இல்லை என்ற நிஜமே அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருக்கிறது.
சென்னையை சேர்ந்த சீமா சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும்போது எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ முறை அதை எடுத்துச் சொல்லியும் அவர் புரிந்து கொள்வதாக இல்லை. நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டுக்குள் வசித்தாலும், (இன்டர்நெட்டால்) நான் விதவையை போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்கிறார். இவரை போன்று மனதில் வைத்து குமுறும் பெண்கள் ஏராளம்.

கணவரும் நானும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்கிறோம். இருவரிடமுமே வேலையின் பரபரப்பு உண்டு. காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு சென்றால் இரவுதான் வீட்டுக்கு வருவோம். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை, அலுவலகத்தில் இருந்து அவர் திரும்பும்போது என் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து வீட்டிற்கு என்னையும் அழைத்துச் செல்வார். பின்பு அதற்கு நேரமில்லை என்று அவர் சொன்னதால் அலுவலகத்திற்கு நான் வேறு வாகனம் வாங்கி தனியாக சென்று வருகிறேன்.
வீட்டிற்கு வந்தாலும் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுகிறார். பிறகு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கிலோ, சாட் ரூமிலோ பொழுதை போக்கிறார் . ஆன்லைனில் அடிக்கடி சில பொருட்களை வாங்கவும் செய்கிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு ரெக்வெஸ்ட் நானும் அனுப்பினேன். அப்படியாவது பேச்சுவார்த்தையில் கணவரோடு இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் ரெக்வெஸ்ட் கொடுத்ததை பார்த்து அவரை கண்காணிக்க அனுப்புவதாக கூறி நிராகரித்துவிட்டார்.

ஒரே வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக வசித்தாலும், என்னுடன் அவர் அத்தியாவசிய தேவைக்கு கூட பேசாமல் இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது தோழிகள் எல்லாம் வீட்டில் கணவனிடம் அலுவலக டென்ஷன் பகிர்ந்து தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு வீட்டில் தான் டென்ஷனே உருவாகிறது. என் கணவர் இன்டர்நெட்டில் வெகு நேரம் பொழுதை கழித்துவிட்டு ரொம்ப தாமதமாக தூங்குகிறார். அதையே காரணமாகச் சொல்லி மறுநாள் தாமதமாக விழிக்கிறார். பேருக்கு கணவன் மனைவி என்று வாழும் இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கணவர் இருக்கும் போது என்னால் விதவை போன்று வாழ முடியாது. அவர் ஆன்லைன் நண்பர்களோடு விருப்பம்போல் வாழட்டும்’’ என்று, பெங்களூருவை சேர்ந்த ஸ்டெல்லா சீறுகிறார்.
இன்டர்நெட் மோகத்தால் கணவரிடம் பாதிக்கப்படும் இத்தகைய பெண்கள் `சைபர் விதவைகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு கணவரிடம் இருந்து மனோரீதியான பங்களிப்போ அல்லது உடல் ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அது பெயரளவுக்கே கிடைக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இருக்காது .

இதில் குறிப்பிட்டு சொல்வது இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட்டில் மூழ்கி, வாழ்க்கையை தொலைக்கும் திருமணமான ஆண்களை பற்றிய முழுமையான புரிதல் அவர்களது குடும்பத்தினருக்கோ, சமூகத்துக்கோ இல்லை. ஒரு பெண் தனது கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்று சொன்னால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சமூகம் புரிந்திருக்கிறது.
இதனை குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அவள் தனது மாமனார்- மாமியாரிடம் தனது கணவர் இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கிறார் என்று சொன்னால் அவன் வீட்டில் தானே இருக்கிறான். வெளியே எங்கேயாவது சென்றால்கூட எங்களால் தட்டிக்கேட்க முடியும் என்று எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதே’ என்று கூறிவிடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தை தெரிஞ்சிக்காமல் பெரியவர்களே மேம்போக்காக நடந்து கொள்வது பெண்களுக்கு கூடுதல் கவலையளிக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் நடந்த விவாகரத்துகளை கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு இன்டர்நெட்டில் மூழ்கிக் கிடப்பது காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்கு தொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. பொறுத்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீத கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.
சில நிமிடங்கள் கூட அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளிடம் பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். பேஸ்புக்கில் தினந்தோறும் பரபரத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

இரவு உலகம் இன்றைய நடுத்தர வயதுக்காரர்களிடம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ- பஸ், ரெயிலில் கிடைக்கும் தோழமையோ பலரது இரவு நேரத்தை சமூக வலைத்தளங்கள் வழியாக அபகரித்துக் கொள்கிறது. அதில் மாட்டிக்கொள்ளும் ஆண்கள் அருகில் உள்ள தனது மனைவியின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை. மற்றவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்கு பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன.
சோசியல் மீடியாக்களில் போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டில் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸுக்கும் துணைபுரிகின்றன. தடுமாறி செல்லும் இத்தகைய ஆண்களை பொறுத்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் சகித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு வீட்டில் தனித்தீவில் இருப்பது போல் ஏராளமான சைபர் விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







