கோடை வெயிலுக்கு இயற்கை நமக்களித்த கொடைகள் தான் பழங்கள் , உலர்ந்த விதைகள் , பழங்கள் மட்டும் அல்லாமல் சில மரங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் பிசின்கள் கூட நமக்கு நன்மை அளிக்கும். அவற்றுள் பிரதானமானது பாதாம் பிசின்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தர வல்லவை. மேலும் பெண்களின் பிரத்யேக பிரச்சினைகளான வெள்ளைப்படுதல் கட்டுப்படும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் எல்லாம் நீங்கும்.
பாதாம் பிசினை ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல கிடைக்கும். இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு, சர்பத்துடனோ கலந்து நீங்கள் அருந்தலாம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் – 1, டாபர் சர்பத்- தேவையான அளவு, சர்க்கரை- தேவைக்கு , சப்ஜா விதை – தேவைக்கேற்ப, பாதாம் பிசின்
செய்முறை :
லெமன் சர்பத்
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து அதனுடன் டாபர் சர்பத், சப்ஜா, பாதாம் பிசின் சேர்த்து பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்
குறிப்பு: சப்ஜா விதை, பாதாம் பிசின் உடல் சூட்டைத் தணிக்கும்.
பாதாம் பிசின் சேர்த்த நன்னாரி சர்பத்:
2 கிராம் பாதாம் பிசின் எடுத்து நீரில் போட்டு ஊற வைத்து 8 மணி நேரம் கழித்து அதை எடுத்து நன்னாரி சர்பத் உடன் கலந்து சாப்பிடலாம்.
பாலுடன் பாதாம் பிசின்:
ஜிகர்தண்டா செய்முறையில் பாதாம் பிசின் தான் முக்கியமான ஒன்று. ஆனால் எப்போதும் ஜிகர்தண்டா செய்ய முடியாது. பாலுடன் பாதாம் பிசின் கலந்து பருகும் போது அதன் மருத்துவப் பயன்களைப் பெறலாம். பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊற வைத்து பிறகு அதனை சூடான பாலில் கலந்து சுவைக்கு ஏற்ப இனிப்பு சேர்த்து பருகலாம்.
கரும்பு சாறு சர்பத் :
முதல் நாள் இரவே பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். பளபளப்பான ஜெல் கிடைக்கும் அதனை கடையில் வாங்கிய கரும்புச்சாறு , நன்னாரி சர்பத் சேர்த்து பருகவும். நுங்கு துண்டுகளை நறுக்கி போட்டு பருகலாம். கோடையின் வெப்பத்தை தணிக்க உதவும் அத்தனையும் இந்த சர்பத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







