மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் நாம் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது அவசியம். நமக்கு பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். மேலும் இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது. குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது.

ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.இந்த நோய்  பெரும்பாலும் குழந்தைகளையே தாக்குகிறது.

மேலும், இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை ‘ஜப்பானிய மூளைக்காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.

மூளைச்சவ்வு அழற்சி

இவ்வகையான கொடிய நோய்கள் குழந்தைகளை தாக்கும் பொழுது உயிரையே பறிக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த நோய் வர வேறு சில நோய்களும் கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால் நாம் ஆரம்பத்திலேயே மருத்துவர்களை அணுகுவது நல்லது. இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.

காசநோய் இருந்தால் எச்சரிக்கை

மேலும், நம்மில்  பலர்  செய்யும்  தவறு  என்னவெனில் மருத்துவரை அனு காமல்குழந்தைகளுக்கு மருந்துகளை தருவது. அதை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளை சவ்வு அழற்சி ஏற்படலாம். பின்பு தாய்க்கு காசநோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மூளை காய்ச்சலின் அறிகுறிகள்

மூளை காய்ச்சல் ஒரே நாளில் தெரிந்து விடாது. அது உடலுக்குள் சென்று மூளையை தாக்க சிறிது காலம் தேவை.  இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட வேண்டும். பின்பு காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்று காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மேல் பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.

மருத்துவர்கள்  கூறுகையில், இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். மேலும், வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும். பெரும்பாலும் நினைவு இழக்கும் வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். பின்பு இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள்.

சிறிய  காய்ச்சல் வந்தவுடனேயே முதலில் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். இதன் மூலமே இவ்வாறான நோய்களில் இருந்து தப்பிக்கலாம். இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. நாம் முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும், கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகாத வண்ணம் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top