தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் புதிய விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பது. தனியார் பேருந்துகள், பயணியர் இரயில், அரசு பேருந்துகள், மெட்ரோ இரயில் மற்றும் வாடகை டாக்ஸி 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.
- அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
- 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.
- தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
- திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமண நிகழ்வுகள் , இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், அரசியல், விளையாட்டு, சமுதாயம், பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் போன்ற இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் இரவிலும் தொடர்ந்து செயல்படலாம். அவசர மருத்துவத் தேவைகளுக்கு, விமானநிலையம், இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
- தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
- தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும் தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.௦௦ மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News