சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.
மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை எனவும், ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் எனவும் அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியின் மூலம், சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.