காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரானா பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது.
இதையடுத்து நடிகை சமந்தா, பிரீதம் ஜுகல்கருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகசைதன்யா ரசிகர்கள் பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
பிரீதம் ஜுகல்கர் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், சமந்தாவுக்கும், எனக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து ஏற்பட்டு உள்ளது என்று தவறான தகவலை நாகசைதன்யா ரசிகர்கள் பரப்பி உள்ளனர்.
சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன், அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் எவ்வித தவறான தொடர்பும் இல்லை என்பது நாகசைதன்யாவுக்கே தெரியும். ஆனாலும் அவர் மெளனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.மேலும், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.