அய்யோதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை, ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ராமர் கோவிலுக்கான கட்டுமானத்துக்கு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை எனவே, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.