அரும்பாக்கத்தை சேர்ந்தவர் இருதயம் ( 32). இவரது தம்பி லூர்துசாமி (28). இவர்கள் இருவரும் அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் தனித்தனியாக செருப்பு தைக்கும் கடையை அமைத்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் இருதயம் கடையிலிருந்த செருப்பு தைக்க உதவும் கருவியை லூர்துசாமி அவரது அண்ணனிடம் சொல்லாமல் எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த இருதயம் எதிரில் உள்ள லூர்துசாமி கடைக்கு சென்று அவரிடம் ‘என்னை கேட்காமல் ஏன் செருப்பு தைக்கும் கருவியை எடுத்தாய்?’ என கேட்டு பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த இருதயம் கடையில் செருப்பு தைக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து லூர்துசாமியின் கழுத்தில் சராமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த லூர்து சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லூர்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி இறந்து போன லூர்து சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தம்பியை கொன்று தலைமறைவான இருதயத்தை தேடி வருகின்றனர்.